
விகடகவி வாசகர்களுக்கு, கிருஷ்ணரை பற்றிய சுவாரசியமான செய்திக் குறிப்புகள்...
◆மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.
◆கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.
◆மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.
◆சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
◆கிருஷ்ணரை தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.
◆கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களும் உண்டு.
◆இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.
◆கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று, கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை, பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.
◆கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைவது, கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.
◆கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் “அஷ்டமி ரோகிணி” என்று அழைக்கிறார்கள்.
◆கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை “ராசலீலா” என்று வடமாநிலங்களில் நாடகமாக நடத்தப்படுவது பழக்கத்தில் உள்ளது.
◆கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.
◆கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7-ம் வயதில் கோபியர்களுடனும், 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.
◆மாமன் கம்சனை வதம் செயத போது, கிருஷ்ணருக்கு வயது 7.
◆கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற “கீத கோவிந்தம்”, “ஸ்ரீமந் நாராயணீயம்”, “கிருஷ்ண கர்ணாம்ருதம்” ஆகிய ஸ்தோத்ரங்கள் சொல்லி, துதித்து வணங்க வேண்டும்.
◆கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர்- சிறுமிகளை கண்ணன், ராதை வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்துசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
◆கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.
◆பெண்கள் கண்ணனை மனம் உருகி, போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.
◆விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால், வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். பசுக்கள் எண்ணிக்கை பெருகி, கடன் தீரும்.
◆கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்து, தொழிலதிபர்கள் வழிபட்டால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.
◆கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.
◆கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.
◆பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.
◆கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
◆ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணர் பார்வைபடும்.
◆ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா தலத்தில் அருள்புரியும் கிருஷ்ணரான ஸ்ரீநாத்ஜீக்கு என்னென்ன நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, லட்டு, இனிப்பு பூரிகள், மோர்க் குழம்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள்.
◆துவாரகையில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு, துவாரகீசன் என்று பெயர். ஜகத் மந்திர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில், பிரதான வாசலின் பெயர் சுவர்க்க துவாரம். எந்த நேரமும் திறந்தே இருக்கும். இதைத் தாண்டி சென்றால் மோட்ச துவாரம் வரும். அதையும் தாண்டி சென்றால்தான் கண்ணன் தரிசனம் கிடைக்கும்.
◆கண்ணனின் லீலைகளை விளக்கும் ‘கர்பா’ என்ற நாட்டியம் குஜராத்தில் பிரபலம். இது தமிழ் நாட்டு கும்மி, கோலாட்டம் போல் நடத்தப்படுகிறது. நீராடும் கோபியர்களின் ஆடைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்லுதல், வெண்ணெய் திருடி உண்ணுதல் போன்ற கண்ணன் புரிந்த லீலைகள், அந்த நாட்டியத்தின் மூலம் அழகாக எடுத்துரைக்கப்படுகின்றன.
◆உடுப்பி கிருஷ்ணர் கோவிலில், பூஜைக்குரிய பொருட்கள் வாங்கும் போது மரத்தாலான மத்து ஒன்றையும் வாங்கும் பழக்கம் பக்தர்களுக்கு உண்டு. உடுப்பியை அன்னப்பிரம்மா என்றும், பண்டரிபுரத்தை நாத பிரம்மா என்றும் போற்றுகின்றனர்.
◆கேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் கிழக்கு நோக்கி அருள்கிறார் கிருஷ்ணன். இவருக்கு பால் பாயாசம் நைவேத்தியம் செய்தால், நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயாசம் தயாரிக்கின்றனர்.
◆குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த தலமான குருவாயூரில் உள்ள உன்னிக் கிருஷ்ணன் விக்கிரகம், பாதாள அஞ்சனம் என்னும் அபூர்வ மூலிகை பொருளால் ஆனது.
◆வைணவத் திருத்தலங்களில் பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிப்பது போல், முக்தி தரும் திருத்தலமாக துவாரகையில் அமைந்துள்ளது கிருஷ்ணன் கோவில். பகவான் கிருஷ்ணர் இங்கு சயனக் கோலத்தில் அருள்புரிகிறார்.
◆கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து, கண்ணனை வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.
◆மதுராவில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது, அந்த இடத்திற்கு மேல் ‘கத்ர கேஷப்தேவ்’ என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.
◆கிருஷ்ண வழிபாடு நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. கிருஷ்ணனைப் பற்றிய மிகப் பழமை வாய்ந்த ஆதாரம் ரிக் வேதத்தில் உள்ளது. இந்திரனுடன் கிருஷ்ணர் போரிட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
◆சாந்தோக்ய உபநிஷத்தில் கிருஷ்ணன் தேவகியின் மகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
◆அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர், மருத்துவ தொழிலை தொடங்குபவர்கள் கிருஷ்ணனை வழிபட்ட பிறகே தொடங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
◆அலெக்சாண்டருடன் போரிட்டு வென்ற போரஸ் (புருஷோத்தமர்) தனது படைகளுக்கு முன்னால் கிருஷ்ணனின் உருவத்தை நிறுத்தியிருந்தார். போரில் வெற்றி பெற கிருஷ்ணனே காரணம் எனக் கருதினார்.
◆யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ்தானிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார்.
◆சிலப்பதிகாரத்தில் கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் என்றும், மனைவி நப்பின்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பின்னை யாதவர் குலத்தைச் சேர்ந்தவள் என்றும், ராதையை கிருஷ்ணனின் காதலி என்றும், ராதை மற்றும் ருக்மணியை விட நப்பின்னை மேன்மையானவள் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. நப்பின்னையை ஆழ்வார்களும் பாராட்டியுள்ளனர்.
◆ஒரு சமயம் அசுரர்கள் சூரியனை தடுத்து மறைத்து விட்டதால், பூமி இருளடைந்து தவித்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா, சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது.
◆நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வேணு கோபாலன் ஆலயத்தில் உள்ள வேணுகோபாலன் சிலை நேபாளம் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராம கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜெயந்தியன்று இங்கு பெருமாளுக்கு கண்திறப்பு, சங்கில் பால் புகட்டும் வைபவங்களும் நடக்கின்றன.
◆செங்கத்தில், பத்மாவதி, ஆண்டாளுடன் கண்ணன் தரிசனம் தருகிறார். பரம பக்தனான ஏழைக்கு புதையலைக் காட்டிய பெருமாள் இவர்.
◆கண்ணன் ராஜகோபாலனாக செங்கமலவல்லி நாச்சியாருடன் அருளும் கோயில் கடலூர், புதுப்பாளையத்தில் உள்ளது. திருப்பதி பெருமாளுக்கான காணிக்கைகளை இங்கு சேர்க்கலாம்.
◆மூலவர் கோபிநாதராகவும், உற்சவர் கிருஷ்ணராகவும், திண்டுக்கல், ரெட்டியார் சத்திரத்தில் அருள்கிறார்கள். இந்த கண்ணன் கால்நடைகளை காப்பதாக ஐதிகம்.
◆கண்ணன் பாமா-ருக்மிணியுடன் அருளும் ஆலயம் மதுரை - கள்ளிக்குடியில் உள்ளது. இங்குள்ள நந்தவனத்திலுள்ள புளியமரம் பூப்பதும், காய்ப்பதும் இல்லை. குழந்தைகள் கல்வியில் சிறக்க, இங்கே மாவிளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
◆காஞ்சிபுரம், மணிமங்கலத்தில் ராஜகோபாலசுவாமி, செங்மலவல்லித் தாயாருடன் கோயில் கொண்டுள்ளார். பெருமாள் இடது கையில் சக்கரமும் வலது கையில் சங்கும் ஏந்தியிருப்பது அதிசயம்.
◆சென்னை ஆதம்பாக்கம், சாந்தி நகரில் பாண்டுரங்கன் ஆலயம் உள்ளது. பண்டரிபுரத்தில் உள்ளது போலவே கோபுர அமைப்புடன் இந்த ஆலயம் உள்ளது.
◆தென்னாங்கூர், பாண்டுரங்கன் ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோற்றத்தில் பாண்டுரங்கனையும் ருக்மணியையும் அலங்கரிக்கின்றனர்.
◆மதுரை - அருப்புக்கோட்டை பாதையில், கம்பி குடியில் கோயில் கொண்டிருக்கும் வேணுகோபாலசுவாமி, நோயினால் துன்புறும் குழந்தைகளை தெய்வீக மருத்துவனாகக் காப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணா நின் திருவடிகளே சரணம்...

Leave a comment
Upload