‘வள்ளி நகை மாளிகை’ என்ற நகைக்கடைத் திறந்த பிறகு வந்தமுதல் ‘அட்சய திருதியை’ நாள், கடையில் கூட்டம் அலை மோதியது.
ஒரு வினாடி நிற்கக் கூட நேரமின்றி, வரும் வாடிக்கையாளர்களையெல்லாம்இன்முகத்துடன் வரவேற்று, அவர்கள் தேவை அறிந்து, பம்பரமாய் சுழன்று வியாபாரம் கவனித்தகடை ஊழியர்கள் ஒவ்வொருவரையும், பார்த்துப் பார்த்துப் பூரித்தார் கடை உரிமையாளர்.
புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல், தீபாவளி போன்ற சிறப்பு நாட்களில்,இந்த அளவிற்குக் கூட்டம் வராது என்றாலும், ஓரளவு கூட்டம் வரும் நாட்கள்தான் அவையும்.அந்த நாட்களிலும் அனைத்து ஊழியர்களும் ஓவர் டைம் வேலை பார்த்தால்தான் அந்தக்கூட்டத்தையே சமாளிக்க முடியும்.
ஓவர்டைம் வேலை பார்த்தால், பொதுவாக இரண்டு மடங்கு சம்பளம் தந்தார்கள் மற்றகடைகளில். ஆனால், இந்த நகைக்கடை முதலாளி பாதி சம்பளம்தான் கொடுப்பேன்’ என்று கறாராகச் சொல்லிவிட்டார்.
ஒரு சில பேர், பொதுவாக கடைத் தெருவில் உள்ள நடை முறைகளை சொல்லிக்கேட்டுப் பார்த்தார்கள்.
“இப்போதானே கடை தொடங்கியிருக்கோம். போகப் போகப் பார்ப்போம்..! நம்மகடையில விற்கிற ‘தங்கத்தோட தரத்தை’ எடுத்துச் சொல்லி நீங்களும் நிறைய கஸ்டமர்சேருங்க என்றார்?” சிரித்துக்கொண்டே.
நகைச் சீட்டு சேர்க்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். கடை ஊழியர்களின்முயற்சியால், அதிலும் கனிசமாக ஜனங்கள் சேர்ந்தனர்.
ஓவர்டைம் பார்க்கும் நாளில், வியர்வை உலரும் முன் கையில் முதலாளி தரும் அரைநாள் சம்பளத்தை சந்தோஷத்தோடு வாங்கிச் சென்றார்கள் ஊழியர்கள்.
முதல் அட்சய திருதியை நாளை முன்னிட்டு ஆட்டோ விளம்பரம், சுவர் விளம்பரம், நாளிதழ்களில் வைத்து அனுப்பும் அச்சு விளம்பரங்கள், எனத் திட்டமிட்டு செய்யப்பட்டதன்பலன். ஊசி முனை இடம் இல்லாத வகையில் நிறைந்திருந்தது கூட்டம். எதிர் பார்த்த இலக்கை விட பன் மடங்கு வியாபாரம் செழித்தது. இதையெல்லாம் கண்டநகைக்கடை உரிமையாளர் சரவணனுக்கு மகிழ்ச்சிப் பிடிபடவில்லை.
தங்கள் சொந்தக் கடை போலமகிழ்ச்சியுடன் வியாபாரம் செய்யும் ஒவ்வொரு தொழிலாளியையும் சி சி டி வி கேமரா மூலம்பார்த்துப் பார்த்து மகிழ்ந்தார்.
கஸ்டமர்கள் அனைவரும் சென்றபின் கடை ஊழியர்கள் வழக்கம் போல, முதலாளியின்அறை வாயிலில் ஓவர்டைம் சம்பளத்துக்காக நின்றார்கள்.
கடை முதலாளி சரவணன், தன் அறையிலிருந்து வெளியே வந்தார். அனைத்துஊழியர்களையும் மனதாரப் பாராட்டினார். வரிசையாய் அனைவரும் வந்தபோது, ஒவ்வொருவர்கையிலும், இனிப்புப் பொட்டலம் ஒன்றை வழங்கினார்.
‘ஓவர் டைம் பணம் ஒரு வேளை இந்த இனிப்புப் பார்ஸலுக்குள் இருக்குமோ?’ என்றுசிலர் நினைத்தார்கள்.
‘எப்பவும் ஓவர் டைமுக்குப் பாதிச் சம்பளம் தருவாரு. இன்னிக்கு கூடுதலா ஸ்வீட்பாக்கெட்.?’ என்றும் நினைத்தார்கள் சிலர்.
“நாளைக்கு உங்களுக்கு விடுமுறை. நல்லா ரெஸ்ட் எடுங்க. கல்லாவுல அம்மா உட்கார்ந்திருக்காங்க சொல்லிட்டுப் போங்க.. ரொம்ப சந்தோஷம்..!” என்று சொல்லிவிட்டு“டக்” கென தன் அறைக்குள் நுழைந்து கதவை மூடிக் கொண்டு விட்டார் சரவணன்.
ஊழியர்களுக்குக் கும்பிடு போட்டார் கல்லாவிலிருந்த முதலாளியம்மா.
“வரிசையா ஒவ்வொருத்தரா வாங்கிக்கங்க..” என்றார்.
“சம்பளம் அம்மா கையால தருவாங்க போல..?” - என்று எண்ணிக் கொண்டே பரபரப்பாய் வரிசையில் நின்றனர்.
‘அட்சய திருதியை’ நாள்ல தங்கம் வாங்குறது சிறப்புனு, பார்த்துப் பார்த்து செய்த உங்களுக்கு இரண்டு கிராம் ‘தங்கக் காசு’ தரச்சொல்லியிருக்காங்க சார்.!” என்று சொல்லியபடியே, சிரித்த முகத்தோடு லேமினேட்செய்யப்பட்ட இரண்டு கிராம் தங்கக் காசு அட்டையை தந்தார்.
ஓவர் டைமுக்கு கொடுத்த அரைச் சம்பளம் போக , மீதியைக் கணக்கில்வைத்து, தொழிலாளர்களுக்கு இரண்டு கிராம் தங்கக் காசு தந்து சர்ப்ரைஸ் கொடுத்த முதலாளியின் தங்கமான குணம் அந்தக் காசில் பளிச்சிட்டது.
Leave a comment
Upload